க.வி.விக்னேஸ்வரன். எதிர்காலத்தில் இனக் கிளர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதற்கான யோசனையாக அவர் இதனை முன்வைத்துள்ளார்.ஆதரவற்ற சிறுவர்களை வீட்டுச் சூழலில் வளர்க்க உதவும் எஸ்.ஓ.எஸ் எனும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்தின் சிறுவர் கிராமம் யாழ். புறநகர் பகுதியான நாயன்மார் கட்டில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் திஸ்ஸகரலியத்த கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில் பேசிய வடமாகாண சபை முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
மத்திய – மாகாண அரசுகளிடையே புரிந்துணர்வும் கூட்டுறவும் நிலவினால்தான் நாடு முன்னேறும். மக்கள் நலம் பெறுவார்கள். மத்திய அரசுக்கு சில அதிகாரங்களையும் கடமைகளையும் சட்டம் விதித்திருப்பது போலத்தான் மாகாண அரசுகளுக்கும் சில அதிகாரங்கள், வரம்புகள், கடப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் அவை போதாது என்பதற்கு 13 ஆவது திருத்தத்தின் குறைபாடுகள் மட்டுமின்றி அதிகாரத்தில் இருப்பவர்களின் அசட்டையும் காரணம்.
மாகாண அதிகாரங்களை விரிவுபடுத்த மத்திய அரசு முன் வரவேண்டும். முக்கியமாக இந்த நாட்டின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் முற்றிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
ஆனால் அது முதற் படிதான். இரண்டாவதாக புதியதொரு அரசமைப்பு தயாரிக்கப்பட்டு ஒற்றையாட்சி முறை கைவிடப்பட வேண்டும். ஒரே தேசம் ஒரே மக்கள் என்றெல்லாம் மேடைக்கு மேடை கூக்குரல் எழுப்புவதில் பயனில்லை.
ஏனென்றால் இது ஒரே தேசமாக இருக்கும் அதே நேரத்தில், வெவ்வெறு பின் புலங்களைக் கொண்ட மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
ஒரே நாட்டில் வாழ்வதால் நாங்கள் ஒரே மக்களாகி விட முடியாது. நாம் யாவரும் ஒரு நாட்டு மக்களே என்று பெருவாரியான பெரும்பான்மையின மக்கள் கூறும்போது “இது சிங்கள பெளத்த நாடு. எல்லோரும் சிங்கள பெளத்த பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டின் கீழடங்கிய இந்த நாட்டின் குடிமக்களே” என்ற அடிப்படை எண்ணத்தில் தான் தமது கருத்தை வெளியிடுகின்றார்கள். இது தவறு என்று அவர்கள் எண்ணுவதில்லை.
அத்துடன் நாம் எமது குழந்தைகளுக்கும் தவறான சரித்திரக் கருத்துக்களைக் கொடுத்து வருகின்றோம் என்பதையும் நாம் சிந்திப்பதில்லை. இன்று சரித்திரம் மாற்றியமைக்கப்பட்டு புதிய ஆனால் தவறான சிந்தனைகள் அரசியல் காரணங்களுக்காகப் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்தத் தருணத்தில் சரித்திர பாடம் நடத்துவது எனது எண்ணமில்லை. ஆனால் தகுதியுடைய சர்வதேச சரித்திர வல்லுநர்கள் சேர்ந்து இலங்கையின் ஆரம்பகாலம் முதலான சரித்திரத்தை ஆங்கிலேயரிடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கும் வரையிலான காலம் வரையில் மீண்டும் எழுதி வைப்பது நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் நன்மை பயக்கும். உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் எமக்கு பிறக்க வேண்டும்.
அண்மையில் சார்மினி சேரசிங்க என்ற சிங்கள பெண் ஊடகவியலாளர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் மகாவம்சம் – புத்தரை இழிவுபடுத்துகிறது (Mahavamsa – An Insult to the Buddha) என்பது அதன் தலையங்கம். உண்மைகளை வெளிக் கொண்டு வரும் சிறந்த கட்டுரை அது.
இந்தத் தருணத்தில் ஒரேயொரு கருத்தை மட்டும் இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் கூறி வைக்கின்றேன். 1919 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கையின் மக்கள் தலைவர்களான ஈ.ஏ.சமரவிக்கிரமவும், சேர் ஜேம்ஸ் பீரிஸூம், சேர் .பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் ஒரு கூற்றை உள்ளடக்கி இருந்தார்கள்.
இலங்கைத் தீவின் மற்றைய சிறுபான்மையர் போலல்லாது தமிழர்கள் சிங்கள மக்கள் போல் நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களே. ஆகவே அவர்களைச் சிறுபான்மையினராக கருதவோ, சிறுபான்மையினருக்குரிய சலுகைகளை அவர்களுக்கு வழங்கவோ தேவையில்லை” என்றார்கள்.
அதாவது தமிழ் மக்கள் இந்த நாட்டின் சிறுபான்மையினர் எனக் கருதப்படாமல் காலாதிகாலமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்திருந்தார்கள் என்ற உண்மையை அவர்கள் நூறு வருடங்களுக்கு முன்னரே கூறியிருந்தார்கள்.
இப்பொழுது வடக்கில் வளரும் ஒவ்வொரு அரசமரத்தையும் சங்கமித்தை அல்லது மகிந்தன் கால அரசமரமென்றும் இராவணன் சிங்கள இனத்தவர் என்றும் புதிய சரித்திரம் வகுக்கப்பட்டு வருகிறது. சிங்கள மொழி நடைமுறைக்கு வந்ததே.
கிறிஸ்துவிற்குப் பின்னர். இராவணன் சரித்திர காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவர். அப்படியிருந்தும் இப்படிக் கூறி வருகின்றார்கள்.
உண்மைக்குப் புறம்பான இந்தப் புதிய சரித்திரம் சிறுவர் சிறுமியர் மத்தியில் விதைக்கப்பட்டால் இனக் கிளர்ச்சிகளுக்கே அது வித்திடும். அதனால்தான் சர்வதேச சரித்திர வல்லுநர்கள் சேர்ந்து இலங்கையின் ஆரம்பகாலம் தொடக்கம் 1948 ஆம் ஆண்டு வரையிலான சரித்திரத்தைப் பக்கச்சார்பின்றி எழுதவேண்டும் என்று குறிப்பிட்டேன். உண்மைக்குப் புறம்பான சரித்திரக் குறிப்புக்கள் குழந்தைகளைப் பாதித்து விடுவன என்பதற்காகவே இதைக் கூறி வைக்கின்றேன் – என்றார்.

