வடபகுதியில் நிலவும் சீறற்ற கால நிலை காரணமாக 532 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக
தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது .
வங்கக் கடலில் உருவான தாழமுக்க நிலைமை காரணமாக அங்கு பெய்துவரும் அடைமழை மற்றும் காற்று காரணமாகவே இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 76 குடும்பங்கள் இடம்பெயர்ந்து மூன்று இடைத் தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது . பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் முல்லைத்தீவு மருகம்பத்து பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 532 குடும்பங்களை சேர்ந்த 1657 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது .
இதனை விட அந்த பகுதியில் ஐந்து வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 219 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன .
இந் நிலையில் முல்லைத்தீவுக்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கம் தற்போது புத்தளம் நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது .
இதனால் வடபகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடர்ந்தும் காணப்படுமென அந்த திணைக்களம் குறிப்பிட்டது .
வடபகுதியிலும் , மன்னார் வளைகுடா பகுதியிலும் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் , 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது .
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் மழையினால் இடம்பெயர்ந்து , தற்காலிக இடங்களில் தங்கியுள்ளவர்களுக்கான நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார் .
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாகவும் மூன்றாவது நாளாக நேற்றும் கடுங்காற்றுடன் , பலத்த மழை பதிவாகியுள்ளது .
கிளிநொச்சி மாவட்டத்திலும் கடுங்காற்று வீசுவதாகவும் , மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன .
புத்தளம் நோக்கி தாழமுக்க நிலைமை நகர்ந்துவரும் நிலையில் புத்தளம் முதல் யாழ் ஊடாக திருகோணமலை வரையிலான கடல் பகுதியில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . இதனால் , நேற்றுபுத்தள்ம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .