மாணவர்களை சிறந்த கல்விமான்களாக்குவதற்கு அடித்தளமாக விளங்குவது முனபள்ளிகளே. இம் முன்பள்ளிக் கல்வியை சிறந்தமுறையில் வழங்குவதன் மூலமே எமது சிறார்களின் எதிர்கால நலனை மேம்பாடடையச் செய்யமுடியுமென ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (9) தெல்லிப்பழை கிழக்கு சித்தியம்புளியடி கலைச்செல்வி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வுகள் நிலையத் தலைவர் அ.சதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற போதே இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் எமது சிறார்கள் இயல்பாகக் கல்வியைத் தொடர முடியாத ஓர் துர்பாக்கிய நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது நிலவுகின்ற அமைதிச் சூழலில் எதுவித இடையூறும் இன்றி எமது சிறார்களால் கல்வியை தொடர முடிகிறது. எனவே இந்த நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்தியவர்களாக நடைமுறைச் சாத்தியமான வழியில் அரசியல் பணியினை முன்னெடுத்துச் செல்லும் சிறந்த அரசியல் தலைமையினை தெரிவு செய்வதனூடாகவே எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும். மக்கள் ஓரணியில் அணி திரண்டு எமக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் எமது அரசியல் உரிமைகளை சாணக்கியமான முறையில் வென்று எடுக்க முடியும்.
தற்போதைய சூழ்நிலையில் உங்கள் பிரதேசத்தில் பல்வேறுபட்ட உட்கட்டுமானப் பணிகளும் அபிவிருத்திப்பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இவற்றினை எம்மாலே மேற்கொள்ள முடியும் இதனை உணர்ந்தவர்களாய் உங்களுடைய வளமான எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டவர்களாய் இப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் அக்கறை கொண்டவர்களாய் நடைமுறைச் சாத்தியமான முறையில் சிந்தித்து செயற்படும் எமது தலைவரின் அரசியல் கரங்களை பலப்படுத்தி எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஓரணி திரளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வட்டுக்கோட்டை பிரதேச இணைப்பாளர் வே.மகேந்திரம் (வள்ளுவன்), தெல்லிப்பழை பனை தென்னை வள அ.கூ.சங்க பொதுமுகாமையாளர் சிவஞானம், மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

