பனந்தொழிற்துறையை சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டுமானால் அது
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மட்டுமே சாத்தியமாகுமென பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தில் பணியாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் மத்தியில் இன்றைய தினம் (9) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பனைசார் தொழிற்துறை மேம்பாட்டுக்காகவும் குறித்த தொழிற்துறைசார்;ந்தவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமாக அக்கறையோடும், தொடர்ச்சியாகவும் உழைத்துக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும் பனந்தொழிற்துறையை உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டுமானால் அமைச்சர் அவர்களால் மாத்திரமே சாத்தியமாகுமென்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே மக்களை சரியான வழிமுறையை காண்பித்து அதனூடாக எமது மக்களுக்கான அரசியல் உள்ளிட்ட அனைத்துரிமைகளையும் வென்றெடுக்கும் வகையிலான செயற்திட்டங்களையும் திட்டமிட்டு சிறப்பான முறையில் அமைச்சர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாற்றத்தை நோக்கியதான வரலாற்றுக்காக மக்கள் சேவையாற்றுபவர்களுக்கு அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட அவர், வடமாகாணத்தில் பனந்தொழிற்துறை மேம்பாட்டுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கைக்கு அமைவாக 270 மில்லியன் ரூபாவை அரச ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை நடைமுறைப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான செயற்திட்டங்கள் ஊடாக வடமாகாணத்தில் பனை தென்னை வளம் சார்ந்த தொழிற்துறை எதிர்காலத்தில் வளர்ச்சியும் முன்னேற்றமும் காணுமென்றும் தெரிவித்தார்.
இதன்போது ஈ.பி.டி.பியின் சார்பில் ஐ.ம.சு.முன்னணியின் வேட்பாளர்கள் அலெக்ஸான்டர் சாள்ஸ், நாகன் கணேசன், திருமதி சிறீதரன் ஞானசக்தி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

