வாழும் கலைஞர்களை பாராட்டி கௌரவிக்க வேண்டியது முக்கியமானது என்றும் எதிர்காலத்திலும் இவ்வாறான பெருவிழாக்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரதான வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் இன்றையதினம் (8) இடம்பெற்ற யாழ்.ஒசை பெருவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறான நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் அது சிறப்பான முறையில் தொடர வேண்டுமென்பது எனது நீண்டகால ஆசையாகயிருந்து வந்தது.
அதை நிறைவேற்றும் வகையில் யாழ்.மாநகர முதல்வரும் கலைஞர் வேல் ஆனந்தனும் என்னை சந்தித்து கலந்துரையாடிய போது அதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் உணர்ந்து கொண்டு அனுமதி வழங்கியிருந்தேன்.
அந்தவகையில், எம்மோடு வாழும் கலைஞர்களை வாழ்த்தி அவர்களை கௌரவிக்க வேண்டுமென்பதுடன் அவர்களுக்கான உதவுதொகையொன்றை வழங்க வேண்டுமென்பதும் எனது விருப்பமாகவுள்ளது.
எமது கலைஞர்கள் தமக்காகவும் தாம் சார்ந்த கலைகளின் மேம்பாட்டுக்காகவும் உழைக்கும் அதேவேளை, எதிர்கால சமுதாய மேம்பாட்;டுக்காகவும் உழைக்க வேண்டிய பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இந்நிலையில், எமது மண்ணுக்குரிய கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் பொறுப்பை உணர்ந்து கொண்டு கலைஞர்கள் தமது பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் அதற்கு தாம் முழுமையான பங்களிப்பை வழங்க தயாராகயிருப்பதாகவும் அமைச்சர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் இசை மற்றும் ஒவியம் உள்ளிட்ட கலைத்துறை வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கி யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கமும், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவும், பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவுப் பரிசில் வழங்கி கௌரவித்தனர்.
இசை நடனம் சிற்பம் நாடகம் உள்ளிட்ட கலைத்துறைகளின் மேம்பாட்டுக்காக உழைத்த 53 கலைஞர்கள் இன்றைய நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக யாழ்.மாநகர சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ். ஒசை பெருவிழா இவ்வாண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலங்களிலும் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நாட்டியப் பேராசான் கலைஞர் வேல் ஆனந்தனின் நெறியாள்கையில் உருவான குருஷேத்திர நாட்டிய நாடகம் வவுனியா மாவட்ட கீழைத் தேய நாட்டிய நாடகமும் திருமதி கோகிலத் வதனி விஜயராகவன் குழுவினரின் வீனாகாணம் இசைநிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

