ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இராணுவத்தின் மீதான பலி சுமத்தல்களை முற்றாக எதிர்க்கின்றோம். ஜாதிக ஹெல உறுமய.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இலங்கை இராணுவத்திற்கு எதிராக
சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை வன்மையாக கண்டிப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார் .
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஈழவாதி என்பது நாட்டுக்கு இரகசியமான விடயமல்ல .
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசேட பிரதிநிதி ஸ்டீபன் ஜே . ராபிடம் போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக மன்னார் ஆயர் கூறியுள்ளார் .
முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் நடத்திய இரசாய ஆயுத தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்த வந்த மக்கள் தன்னிடம் கூறியதாகவும் ஆயர் குறிப்பிட்டுள்ளார் .
மன்னார் ஆயர் இலங்கை இராணுவத்திற்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளமை இது முதல் முறையல்ல .
விடுதலைப் புலிகள் பொதுமக்களை கேடயமாக வைத்திருந்தமை , மடு மாத சொரூபத்தை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று வைத்திருந்தமை தொடர்பில் மன்னார் ஆயர் இதுவரை தனது வாயால் வார்த்தைகள் எதனையும் வெளியிடவில்லை .
தமது கட்டளையின் கீழ் மக்களை பயங்கரவாத ஆட்சியின் கீழ் வைத்திருந்த விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்கள் இராணுவத்தினரே பாதுகாப்பாக காப்பற்றினர் .
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் நிலைமையை ஏற்படுத்திய இராணுவத்தினருக்கும் புண்ணியம் கிடைக்க வேண்டும் .
போர் நடைபெற்ற காலத்தில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி மக்களையும் இராணுவத்தினரையும் ஆபத்துக்கு உள்ளாகியது விடுதலைப் புலிகள்தான் என்பதை மன்னார் ஆயர் அறியாதவர் அல்ல .
பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட இலங்கை இராணுவம் ஒழுக்கமான சட்டரீதியான இராணுவம் என்பது உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை .
பிரபாகரனின் நிழலாக மாறியுள்ள மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை இராணுவத்தினர் மீது சுமத்தியுள்ள போர் குற்றச்சாட்டுக்களை வன்மையாக கண்டிப்பதுடன் அதற்கு எதிர்ப்புகளையும் வெளியிடுகிறோம் .
நாட்டின் ஒருமைப்பாடு , இறையாண்மையை ஆபத்தில் தன்ளும் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தேசத்துரோக , தமிழ் இனவாத , பிரிவினைவாத , பயங்கரவாத சார்பான வெயற்பாடுகள் மற்றும் கருத்துக்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என வர்ணசிங்க தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .