நாளை 'ஜில்லா' வெளிவருமா? : படத்தினைத் தடை விதிக்கக்கோரி வழக்கு
விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள ஜில்லா திரைப்படத்தினை தடைவிதிக்கக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.
பொங்கல் வெளியீடாக 'ஜில்லா' திரைப்படம் நாளை வெளிவரவுள்ள நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சௌமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, தெலுங்கில் வெளியான பகீரதா என்ற படத்தை தமிழில் ஜில்லா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட தயாரித்துள்ளேன். ஜில்லா என்ற பெயரை 2008 ஆம் ஆண்டில் முறைப்படி பதிவு செய்துள்ளேன்.
படத்தை வெளியிட தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த படத்துக்கும் 'ஜில்லா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


